இந்தக் கூட்டத்தில் உண்மையான அறிவாளி ஒருவர் இருந்தால் அடுத்த வினாடி அவர்
என்ன செய்வார் என்பதை யாராவது கணிக்க முடியுமா? முடியாது. ஏனெனில் இதுவரை
யாருமே செய்யாத ஒன்றை அவர் செய்துவிடக்கூடும். ஒரு அறிவாளி இருந்தால் உலகில்
இதற்குமுன் நடந்தேயிராத நிகழ்ச்சி ஒன்றை அவரால் செய்ய அதிக சாத்தியம்
இருக்கும் இல்லையா? ஆனால்,
இங்கே ஒரு முட்டாள் இருப்பதாக
வைத்துக்கொள்வோம். அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர் வாழ்க்கை முழுவதும்
எதிர்காலத்தில் எப்படி வாழ்வார் என்று எளிதாகச் சொல்லிவிட முடியும்.
நீங்கள்
ஜோதிடம் பார்க்கப் போனால் உங்கள் எதிர்காலம் எப்படியிருக்குமென்று ஒரு
காகிதத்தில் எழுதியே கொடுத்து விடுகிறார்கள். இதற்கு என்ன அர்த்தம்?
உங்களுக்கு அறிவு இல்லை என்று அர்த்தமில்லை. அதைப் பயன்படுத்தப் போவதில்லை
என்று நீங்கள் முடிவெடுத்திருப்பதாகத்தான் தெரிகிறது. உங்களுடைய அறிவைப்
பயன்படுத்த வேண்டாம் என்று முடிவெடுத்ததுபோல் உள்ளது.
உதாரணத்திற்கு வடிவம் என்று ஒன்றிருந்தால் அதற்கொன்று சில அதிர்வுகள்
இருக்கும். அந்த அதிர்வினால் ஒரு தன்மை இருக்கும். இப்போது இந்தக்
கைகுட்டையை நான் ஒரு விதமாகப் பிரித்தால் அதற்கென்று ஒரு அதிர்வும்,
வேறுவிதமாகப் பிடித்தால் அதற்கென்று ஒரு அதிர்வும் இருக்கும். உங்களுக்குச்
சூட்சுமமாக உணரத் தெரிந்திருந்தால் இதை அனுபவப்பூர்வமாக உணர்ந்து
கொள்ள
முடியும். நீங்கள் வைத்டிருக்கும் விதமே அதிர்வுகளை மாற்ற முடியும். ஒவ்வொரு
வடிவத்திற்கென்றும் தனி அதிர்வுகள் உண்டு. அதுபோல் கிரகங்களுக்கும் சில
அதிர்வுகள் உண்டு. அதிர்வுகள் காரணமாக அவை வென்வேறு நிலைகளில் இருக்கும்போது,
அதில் ஏற்படும் நிகழ்வுகளினால் உங்களுடைய மனநிலையில் சில பாதிப்புகள்
ஏற்படக்கூடும். உதாரணத்திற்கு அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் சற்றே
மனநிலை சரியில்லாதவர்கள் சற்று கூடுதலாக நிலையில்லாமல் இருப்பார்கள். இது
உங்களுக்குத் தெரியுமல்லவா? சற்றே மனநிலை சரியில்ல்லமல் இருப்பவர், சற்றே
கூடுதலாகக் கட்டுப்பாடு மீறி இருப்பார். நீங்களும் அந்த நாட்களில் அதுபோல்
ஆகி விடுகிறீர்காளா? உங்களையும் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் வீட்டுக்குள்
பூட்டிவைக்க வேண்டுமா என்ன? தேவையில்லை அல்லவா! ஏனென்றால் அவர்களோடு
ஒப்பிடும்போது உங்கள் மனம் கொஞ்சம் சமநிலையில் இருக்கிறது. அதனால் நிலா
எங்கேயிருந்தாலும் அது உங்களுக்குள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவில்லை.
அதுபோல இன்னும் கொஞ்சம் சம நிலையை நீங்கள் அடைவீர்கள் என்றால் அந்தக் கிரகம்
எங்கே போனாலும் நீங்கள் உங்கள் தன்மைக்கேற்ப இருப்பீர்கள். உங்களைவிட
குறைந்த சக்தி எதுவும் உங்களை ஆளாது.
இந்தக் கிரகங்கள், நட்சத்திரங்கள் எல்லாமே ஜடப்பொருட்கள் தானே? கல், மண்
போல அவையும் ஜடப்பொருட்கள். ஜடப்பொருட்கள் வலிமையானவையா? மனிதத் தன்மை
வலிமையானதா? மனிதத் தன்மை ஜடப்பொருட்கள் மீது ஆளுமை செலுத்த வேண்டுமா?
அல்லது மனிதத் தன்மைமீது ஜடப்பொருட்கள் ஆளுமை செலுத்த வேண்டுமா? எது சரி?
எது எதை ஆளவேண்டும்? மனிதத்தன்மைதான் ஜடப்பொருட்கள் மீது ஆளுமை செலுத்த
வேண்டும். அந்நிலை வந்துவிட்டால் நட்சத்திரங்கள் எங்கே போனாலு, கிரகங்கள்
என்ன ஆனாலும் நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? உங்கள் உள் தன்மை உறுதியாகவும்
சமநிலையிலும் இருந்தால் நீங்கள் விரும்பும் விதத்தில் உங்கள் வாழ்க்கையை
நிச்சயமாக உருவாக்கிக் கொள்ள முடியும்.
யோக அறிவியல் என்பது உங்கள் முழு வாழ்க்கையையும் உங்கள் உடலின் தன்மை,
உங்கள் மனதின் தன்மை, உங்கள் வாழ்வின் தன்மை அனைத்தையும் முழுக்க உங்கள்
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நீங்கள் விரும்பும் விதத்தில் வாழ்க்கையை
அமைத்துக்கொள்வதற்கான வாய்ப்புத்தான். எந்த அளவிற்கு நீங்கள் ஆளுமை செலுத்த
இயலுமென்றால் எந்தக் கருப்பையில் பிறக்கப் போகிறீர்கள் என்பதைக்கூட நீங்களே
முடிவு செய்யலாம். அந்த அளவிற்கு முடிவெடுக்கும் சக்தி உங்களிடம் உண்டு.
அதற்கென்ற ஒரு அறிவியல் அடிப்படையும் உண்டு. எப்போது பிறப்பது, எப்போது
இறப்பது என்கிற முடிவைக்கூட நீங்களே எடுக்கலாம். அதற்கும் ஒரு அறிவியல்
உண்டு. இந்த உள்நிலை அறிவியலைத்தான் யோகா என்கிறோம்.
இப்போது எண் கணிதத்திற்கு வருவோம். எண் கணிதப்படி பெயரை மற்றிக்கொண்டால்
பயன் உண்டா என்று கேட்கிறீர்கள். நீங்கள் இக்கேள்வியைக் கேட்பதால், எனக்கொரு
சம்பவம் நினைவிற்கு வருகிறது. நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் திருப்பூரில்
ஈஷா யோகா வகுப்பு நடந்து கொண்டிருந்தது. அதில் பங்கேற்ற ஒருவர் தன் அடையாள
அட்டையில் ‘பச்சா’ என்று ஆங்கிலத்தில் வரும் விதமாக எழுதியிருந்தார். நானும்
அவரை பச்சா, பச்சா என்று அழைத்து கொண்டிருந்தேன். 12 நாள் வகுப்பிற்குப்
பிறகு என்னிடம் வந்து, ‘நீங்கள் வகுப்பில் என்னை பச்சா, பச்சா
என்றழைத்தீர்கள். என் பெயர் பச்சா இல்லை;பாட்ஷா’ என்று கூறினார். பச்சா
எங்கே, பாட்ஷா எங்கே? இந்தியில் பாட்ஷா என்றால் ‘சக்கரவர்த்தி’ என்று பொருள்.
பச்சா என்றால் சிறுவன் என்று பொருள். எப்படி ஒப்பிடுவது? பச்சா என்று
வரும்படி ஏன் எழுதியிருந்தீர்கள்?” என்று கேட்டேன்.
‘யாரோ ஒரு எண் கணித
ஜோசியர் கூறினார். அதனால் நான் பாட்ஷாவை பச்சாவாக மாற்றி விட்டேன்’ என்று
கூறினார். வாழ்க்கையில் சக்கரவர்த்தியாகும் வாய்ப்பு இருக்கையில் ஒரு
சிறுவனாக ஆவது ஏன்?
முதலில் இந்த எண்களை உருவக்கியவர் யார்? அவை இயற்கையிலேயே இருந்தனவா?
நம்முடைய வசதிக்காக நம் விரல்களைக்கொண்டு எண்ணூவதற்கு வாய்ப்பாகத்தான்
எண்களை உருவாக்கினோம். பத்து விரல்கள் என்கிற அடிப்படையில்தான் பத்து வரை
எண்கள் வரையறுக்கப்பட்டன. நமக்குப் பதினான்கு விரல்கள் இருந்திருந்தால்
8,9,10, தாம், தூம், என்று எண்ணிக்கொண்டிருப்போம்.
10 விரல்கள் இருப்பதால்
நமது வசதிக்காக எண்கள் நம்மீதே ஆளுமை செலுத்தலாமா? இதற்கு ஒரு உதாரணம்
சொல்ல விரும்புகிறேன். ஆறேழு வருடங்களுக்கு முன்பு நான் ஒரு மாருதி கார்
ஓட்டிக்கொண்டிருந்தேன். பிறகு அதை விற்க முடிவு செய்தேன். எனக்குத் தெரிந்த
ஒருவர் அதனை வாங்க முன் வந்தார். நான் அவரிடம், ‘அந்தக் கார் மிக அதிகமான
அளவு பயன்படுத்தப் பட்டுவிட்டதால் அதை நன்றாகப் பார்த்துவிட்டு விருப்பம்
இருந்தால் வாங்கிக் கொள்ளலாம்’ என்று சொன்னேன். அதற்கு அவர், ‘ இல்லையில்லை!
எதையும் பார்க்க வேண்டாம். இதை நீங்கள் விற்றால் நான் தான்
வாங்கவேண்டுமென்று, நீங்கள் அதை வாங்கும்போதே முடிவு செய்து விட்டேன்’
என்றார். ஏன் என்று கேட்டதற்கு. ‘உங்கள் காருக்கு அருமையான ஒரு எண்
அமைந்திருக்கிறது’ என்றார். இத்தனை நாள் இந்தக் காரை ஓட்டியிருக்கிறேன்.
அதன் அருமையான எண் பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை. “கார் எண்ணெல்லாம்
இருக்கட்டும். முதலில் ஓட்டிப் பாருங்கள். வாங்கும் முன்பே
பிடித்திருக்கிறதா என்று பாருங்கள்” என்று வற்புறுத்தினேன். அவர்,
‘அதெல்லாம் வேண்டாம். இந்த எண் அமைந்ததே போதும்’ என்று சொல்லிவிட்டார்.
எப்படி இப்படி ஒரு மனிதர் இருக்க முடியும் என்று ஆச்சரியமாக இருந்தது.
அவர் என்னிடம் அந்தக் காரின் எண் 333 என்றும்; அவரது பிறந்தநாள் 3-வது மாதம்,
3-ம் தேதி என்பதால், அன்று காலை பதினொன்றேமுக்கால் மணி அளவில் காரை
எடுத்துச் செல்வதாக கூறினார். நான் அப்போதைய நிலவரத்தில் அந்தக் கார் என்ன
விலைக்குப் போகும் என்று அவரையே விசாரித்து அதற்கேற்ப ஒரு தொகையைக்
கொடுக்குமாறு சொல்லிவிட்டேன். அவர் இருக்கும் நிலையைப் பார்த்து அவரை
அப்படியே விட்டுவிடக்கூடாது என்று எனக்குத் தோன்றியது. எனவே அவரிடம்,
‘பதிவு எண்தான் வெளியில் உள்ளது. ஆனால் காரின் உண்மையான எண், என்ஜினிலும்,
சேசிஸ்ஸிலும் இருக்கும். பதிவு எண்ணை எப்போது வேண்டுமானாலும்
மாற்றிக்கொள்ளலாம். என்ஜின் மற்றும் சேஸிஸ் எண்களைத்தான் பார்க்க வேண்டும்
என்று சொன்னேன். இப்போது அவர் மிகவும் குழப்பமடைந்து விட்டார். தனது
எண்கணித குருவிடம் கேட்கச் சென்றார். அவரோ அந்த எண்கள் எல்லாம் தேவையில்லை,
பதிவு எண்ணைப் பார்த்தாலே போதும் என்று சொல்லிவிட்டார். என்ஜினிலும்
சேஸிஸிலும் எண்கள் இருக்குமா என்றே கூட அவருக்குத் தெரியவில்லை. இது
பார்வைக்குத் தெரியுமோ, அது மட்டும் தேவை. எனவே, அவர் என்னிடம் இருந்த காரை
வாங்கிக்கொண்டார். அவர் அந்தக் காரை ஒரு லட்ச ரூபாய்க்கு வாங்குவதாகச்
சொல்லியிருந்தார். நானும் சம்மதித்திருந்தேன். அவர் பணத்தைக் கொண்டுவந்த
போது 99999 ரூபாய் தரவேண்டும் என்பதற்காக ஒரு ரூபாய் குரைத்து தர சங்கடமாக
இருந்தது. எனவே அந்த ரூபாய்க்கு பதிலாக ஒரு பெரிய பரிசுப் பொருளையும்
சேர்த்து கொண்டுவந்திருந்தார். நான் அவரிடம், ‘நீங்கள் எது வேண்டுமானாலும்
செய்யுங்கள். இந்தக் காரை நீங்கள் மகிழ்ச்சியோடு கொண்டு சென்றால் எனக்கு
மகிழ்ச்சிதான்’ என்று சொல்லிவிட்டேன்.
பிறகு ஒரு நாள் அவர் காரை ஓட்டிக்கொண்டு செல்லும்போது, பின்னால் சாய்ந்து
கொள்ளும் வசதியுள்ள அவரின் இருக்கை திடீரென்று பின்னே நகர்ந்து விட்டது.
அவர் மிகவும் பயந்து விட்டார். ஏதோ ஒரு தீய சக்தி அவரைப் பின்னாலிருந்து
இழுத்துவிட்டதாக எண்ணிக்கொண்டார். ஒருமுறை நான் அவரது இல்லத்திற்குப் போக
நேர்ந்தபோது, ‘கார் எப்படியிருக்கிறது’ என்று கேட்டேன். மிகவும்
தயங்கித்தயங்கி, ‘அந்தக் கொடிய நிகழ்ச்சி நடந்ததால் காரை விற்றுவிட்டேன்’
என்றார். இருக்கையின் பிடிமானம் எங்காவது அறுந்து பின்னோக்கி
நகர்ந்திருக்கக்கூடும் என்பது கூட அவருக்குப் புரியவில்லை.
நீங்கள் எப்போதும் அச்சத்திலேயே வாழ்வதால்தான் ஜோதிடமும் எண்கணிதமும் உங்கள்
வாழ்க்கையில் ஆட்சி செலுத்துகிறது. நீங்கள் அன்பிலோ, அமைதியிலோ, ஆனந்தத்திலோ
வாழ்வதில்லை. அச்சத்திலேயே
வாழ்கிறீர்கள். அச்சமே உங்கள் வாழ்வின்
அடிப்படையாகும் பொழுது ‘நான் என்ன சொல்லியும் உங்களை நம்ப வைத்துவிட
முடியும். எதையும் நம்பி விடுவீர்கள். ‘தினமும் வீட்டை விட்டுக் கிளம்பும்
போது, உங்கள் சுண்டு விரலை மூன்று முறை வாயில் வைத்துவிட்டுக் கிளம்ப
வேண்டும், இல்லையென்றால் என்ன நடக்கும் என்றே தெரியாது’ – இப்படி நான்
சொல்லிவிட்டால், அதையும் ஒரு கதையோடு கொஞ்சம் திகிலூட்டும் விதமாகச்
சொல்லிவிட்டால் போதும். இப்போது கேலியாகச் சொல்லிவிட்டேன்.
உங்கள் உள்நிலைமீது, உங்களுக்கு எந்த மரியாதையும் இல்லை. நாம் உருவாக்கிய
எண்களும், சில ஜடப்பொருட்களும் உங்களுக்கு மிகவும் முக்கியமாகிவிட்டன. அவையே
உங்கள் மீது
ஆட்சி செலுத்துகின்றன. இவையணைத்துக்கும் மேலான சக்தி
உங்களுக்குள்ளேயே இருக்கிறது. ஆனால் அதன்மேல் உங்களுக்கு எந்த மரியாதையும்
இல்லை. 1,2,3,4 இப்போது உங்களுக்கு முக்கியமாகிவிட்டது.
