Softec Computer Education, Sulur pirivu, Thennampalayam, Chinniampalayam

Airway Times | Train Times | Call Taxi | Pin codes | Ambulance | Hospitals | Blood Bank | Eye Bank | Best Schools | Best Colleges | Indian Baby Names | Best Newspaper & Magazines | Matrimonial

                                                             Home            ஜோதிடம்    வாஸ்து            நியுமராலஜி

ஆன்மீகச் சந்தை ஒரு முன்னுரை - டாக்டர்.ருத்ரன் !

01.04.09 ல் பதிவு செய்யப்பட்டது - நன்றி வினவு வினை செய்

  குருநாதர்கள் ! பாகம் - 1 - முடிவறம்

g3அவர்கள் ஏற்கெனவே ஏகப்பட்ட பேர். இன்னும் வந்து கொண்டே இருக்கிறார்கள். இப்போதெல்லாம் அவர்கள் திக்குத்தெரியாக் காடுகளில் கண்காணாத ஒரு மூலையில் ஒதுங்கியிருப்பதில்லை. அவர்களுடைய வாசஸ்தலம் குகைப்பொந்துகளும் இல்லை. மலை உச்சிகளும் இல்லை. ஊடகங்கள் அனைத்திலும் அவர்கள் வாசம் செய்கிறார்கள். அவர்களைத் தேடிப்போக நீங்கள் விரும்பாவிட்டாலும் அவர்கள் உங்களைத் தேடி வருகிறார்கள். ஆம். ஆன்மீகச் சந்தை முன்னெப்போதும் இத்தனை சூடாக இருந்ததே இல்லை.

இந்தியா என்றழைக்கப்படும் உலகமயமாக்கப்பட்ட புதிய வணிகமாயையில் இந்தக் கில்லாடி குருநாதர்கள் ஒரு வளமான சந்தையைக் கண்டுகொண்டார்கள். விற்பனைக்கான சரக்கு அவர்களிடம் தயாராக இருக்கிறது. அதற்கேற்ப தேவையையும் அவர்களே உருவாக்கி விடுகிறார்கள். இத்தகையதொரு குருநாதரை உற்பத்தி செய்வதற்கான செலவும், அவர்களைச் சந்தைப்படுத்துவதற்கான செலவும் ஆன்மீக வாடிக்கையாளர்களின் பில்லில் சேர்க்கப்பட்டுவிடும். அதனாலென்ன, குருநாதர்களின் வியாபாரம் சக்கை போடு போடுகிறது. இந்த வியாபாரத்திற்கு ஆன்மீகத் தணிக்கையும் கிடையாது. லவுகீகத் தணிக்கையும் கிடையாது. வாடிக்கையாளர் கூட்டமோ அதிகரித்தபடியே இருக்கிறது.

முன்னொரு காலத்தில் இந்த ஆன்மீகப் பச்சடியின் ருசிகனாக இருந்தவன் என்ற முறையிலும், “இந்த ஆன்மீகச் சந்தையில் நாமும் குதித்தாலென்ன” என்று இதனைக் கூர்ந்து கவனித்த பொறாமையும் கூச்சமும் கொண்ட தொழில்முனைவன் என்ற முறையிலும் இந்த ஆட்டத்தை நான் கூர்ந்து கவனித்து வருகிறேன். முழுமையாக கவனித்து வருகிறேன் என்றும் சொல்ல்லாம். ஆன்மீக வியாபாரத்தில் நுழைவது என்ற இந்தச் சவாலுக்குள் நுழையவிடாமல் என்னைத் தடுத்த்து வேறெதுவும் இல்லை. என்னுடைய இயல்புதான். இயல்பு என்றால், சுயமரியாதை குறித்துத் தெளிவு கொண்ட என் இயல்பு. கண்ணாடியில் முகம் பார்த்து வெட்கப்பட நேரும் அபாயம் குறித்து அஞ்சும் என் இயல்பு. ஆக, இந்தத் தொழிலில் குதிக்கவொட்டாமல் என் இயல்பே என்னைத் தடுத்துவிட்டது. அந்த வயிற்றெரிச்சல் காரணமாகத்தான் இதை எழுதுகிறாயா என்று கேட்கிறீர்களா, இருக்கலாம்.

இன்றைக்கு இந்தத் தொழிலில் முன்னணியாக இருக்கும் குருநாதர்களுக்கு முகத்தில் எவ்வளவு முடி இருக்கிறதோ, அதற்கு மயிரளவும் குறையாமல் எனக்கும் முகம் நிறைய முடி இருக்கிறது. எனவே இந்தத் தகுதியைப் பொறுத்தவரை நான் தேர்வில் நான் பாஸ் ஆகி விட்டேன். ஆனால் குருநாதர் ஆவதும், குருநாதராகத் தொடர்ந்து நீடிப்பதும் வெறும் முடிவறம் அல்லவே.! (முடிவறம் என்ற சொல்லின் பொருள் என்ன என்று திகைககிறீர்களோ!  குருநாதர்களைக் கூர்ந்து கவனித்து வந்த ஆதி நாட்களில் நான் கற்றுக்கொண்ட தந்திரங்களில் இதுவும் ஒன்று. அன்றாட வாழ்வின் உப்புச் சப்பில்லாத விசயங்களைப் பற்றிப் பேசும்போது, புரியாத மொழியில் புதிரான சொற்களைப் பயன்படுத்த வேண்டும். அதனால்தான் வெறும் முடி சமாச்சாரம் என்று சொல்லியிருக்க வேண்டிய அற்ப விசயத்தை முடிவறம் என்று குறிப்பிடுகிறேன்.)

இந்தத் தொழிலில் இறங்குவது குறித்து நான் தீவிரமாக யோசித்து வந்தேன் என்ற காரணத்தினால், சந்தையில் விற்பனையாகும் குருநாதர்களைப் பல ரகங்களாக வகைப்படுத்தியிருக்கிறேன். முதலாவதாக இத்தகைய குருநாதர்களை பேசுபவர்கள், பேசாதவர்கள் என்று இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். முடி விசயத்தைப் பொருத்தவரை அது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். வளர்கிறதா, நல்லது. வளர மறுக்கிறதா, பரவாயில்லை. மழுங்கச் சிரைத்து விடலாம். முகத்தை மட்டுமல்ல, தலையையும். உங்கள் தலையை நீங்கள் மொட்டையடித்துக் கொள்கிறீர்கள், அடுத்தவன் தலையை மொட்டையடிக்கவில்லையே!

பேசும் குருநாதர்களைக் காப்பி அடிப்பது கொஞ்சம் கஷ்டமான காரியம். இந்த ரகத்தைச் சேர்ந்த குருநாதர்கள் ‘சுட்டு’ பேசுவதற்கு உதவியாக ரஜனீஷின் சரக்குகள் போதுமான அளவு இருக்கின்றன என்ற போதிலும், அதிகம் பிரபலமாகாத ஏதாவது சில மத இலக்கியங்களின் பெயர்களையாவது இத்தகைய குருநாதர்கள் தொடர்ச்சியாகப் படித்துத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். தங்களது ஞானோபதேசத்தைத் தடையின்றித் தொடர்ந்து வழங்க இது அவசியம். இது கொஞ்சம் சிக்கலான ஆட்டம்தான். இதில் கொடி நாட்ட வேண்டுமானால் முடி மட்டும் போதாது. மொழி ஆளுமையும் பேச்சுத் திறனும் வேண்டும்.

guru-p1பேசாக் குருநாதர் ஆவதற்கும் சில சிறப்புத் திறன்கள் தேவைப்படுகின்றன. கருத்தை வரவழைக்கும் கலையைக் கற்றுத் தேர்வதைக் காட்டிலும் பொருளை வரவழைக்கும் கலை எளிதில் கைவரக் கூடியதுதான். ஆனால் தங்க நகை போன்றவற்றை வரவழைக்க வேண்டுமானால் அது கொஞ்சம் சிரமம்தான். நகை சப்ளையை ரகசியமாக வைத்திருப்பதற்கு நீண்ட கால வணிக ஒப்பந்தங்கள் தேவைப்படும். அதற்கு பேரம்பேசும் திறனும் ரகசியம் குலையாத கட்டுக் கோப்பான அமைப்பைப் பராமரிக்கும் திறனும் வேண்டும். வி.ஐ.பி வாடிக்கையாளர்கள் வரும்போது வெறும் சாம்பலை மட்டும் கொடுத்து அனுப்ப முடியுமா? பகுத்தறிவாளர் என்று கூறப்படுபவரும் தன்னை நாத்திகன் என்று கூறிக்கொள்பவருமான ஒரு பிரமுகரின் வீட்டில் நடந்ததைப் போல, மூன்று பேருக்கு மோதிரம் வரவழைத்துக் கொடுத்ததோடு மோதிர சப்ளை நின்று போகலாம். நாலாவது மோதிரத்தை எடு என்று இன்னொரு வி.ஐ.பி வந்து கழுத்தறுக்கலாம்.

நீங்கள் பேசாக் குருநாதர் வகையைச் சேர்ந்தவராக இருந்து, பொருளை வரவழைக்கும் கலையும் கைவராதவராக இருந்தால், பிரமித்து நிற்கும் பக்தர்களை நீங்கள் கட்டிப்பிடிக்கலாம், முத்தமிடலாம், காறித்துப்பலாம், உதைக்கலாம், உருளலாம். இந்த ஆட்டத்துக்கு விதியே கிடையாது. எல்லாம் செல்லுபடியாகும்.

குருநாதர்கள் என்றாலே ஆன்மீகக் கடத்திகள்தான். எனவே வாடிக்கையாளர்களுக்கு வாக்குறுதி வேண்டும். நீங்கள் ஜென் பற்றிப் பேசுவதாக இருந்தாலும் முற்பிறவி மற்றும் வரும் பிறவிகள் குறித்துக் கோடி காட்டும் வகையில்தான் நீங்கள் பேசவேண்டும். நேற்றுவரை வெளித்தெரியாத, இன்று பிரத்தியட்சமாகிவிட்ட கடவுள் என்று உங்களுக்கு நீங்களே பட்டம் சூட்டிக்கொள்ளப் பொருத்தமான தருணம் வரும் வரையிலும், வேறுவழியில்லை - குரு என்ற பட்டத்துடன் நீங்கள் நிறைவடையத்தான் வேண்டும். ஆனால் காத்திருத்தில் வீணாகிவிடுவதில்லை. உங்களுடைய சந்தைப்படுத்தும் திறன், ஆள் பிடிக்கும் திறன் ஆகியவற்றைப் பொருத்து ஓரிரு ஆண்டுகளில் கடவுளாகி விடலாம்.

முட்டாள்கள் மட்டுமே இந்த வியாபாரத்தின் வாடிக்கையாளர்கள் என்ற போதிலும், நாம் இதனை சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்க முடியாது. ஏனென்றால் இது வெறும் முடி சமாச்சாரம் இல்லையே!

- தொடரும்