பொதுவாக நோய் என்பது மனிதனிடத்திலே மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்து விட்டது. காரணம் நாம் உட்கொள்ளும் உணவின் சத்து குறைபாடு. தவறான பழக்கவழக்கங்கள், அசுத்தமான காற்று, அசுத்துமான தண்ணீர், அதையும் தாண்டி மனிதனின் மனநிலை.
எதற்கெடுத்தாலும் கவலைப்படுகின்ற மனோநிலை தற்பொழுது மனிதனிடத்திலே ஓங்கி நிற்கிறது. எது கிடைத்தாலும் அதை அனுபவிக்காமல், அதில் உள்ள சுகங்களை தேடாமல், அதற்கு அடுத்த நிலையில் இருப்பதை கண்டு மனம் ஏங்குவது... நம்மால் கையால் ஆகாமல் விட்டுவிட்டதையும், நம்முடைய நிறைவேறாத பேராசைகளையும் நம் குழந்தைகளிடத்தில் எதிர்பார்த்து அது கிடைக்காமல் போக வயதுக்கு மீறி அவர்களை துன்புறுத்தி அவதிப்படுவது, தன் சுற்றங்கள், சொந்தங்கள், நண்பர்கள் மற்றும் இந்த சமுதாயத்திற்கு முன்னால் தானே பெரியவன், தனக்கு எல்லாம் தெரியும், தான் செய்வது, சொல்வது தான் சரி, சிறந்தது என்று தன் திறமைக்கும், இயல்புக்கும், தன் தகுதிக்கும் மீறி ஒரு வரட்டு கவுரவத்தையும் தனக்கு பொருத்தமில்லாத ஒரு இமேஜையும் கிரியேட் செய்து விட்டு, பின் அவற்றை காப்பாற்றுவதற்க்காக அல்லல் படுவதும், இப்படியாக ஒரு குப்பை லாரி அளவு ஏகப்பட்ட கவலைகள்.....
மகாபாரதத்திலே ஒரு உபதேசம் உண்டு. அர்ச்சுனா.. உன்னால் மாற்ற முடியாததை பற்றி நீ வருந்துவது சரியல்ல என்று. நாம் கவலை படுவதாலோ, கூப்பாடு போடுவதாலோ நடப்பது நடக்காமல் இருக்காது. நடக்காதது நடந்தும் விடாது.
சில பேரு குடிக்கரதுக்குனே கவலை படுவானுக. அப்புறம் கவலையை மறக்க குடிக்கறேன் அப்படீம்பாங்க. ஏதாவது காரணம் கண்டுபிடுச்சு, அதுக்கு கவலைப்பட்டு, அந்த கவலையை மறக்க குடிப்பானுக. இப்படியல்லா சில ஆளுக இருக்கானுக. மொத்ததில குடிக்கணும்.
இப்படித்தான் எங்க உறவினர் ஒருத்தர் மகா குடிகார மனுஷன். ஒரு நாள் நெஞ்சு வலி வந்து. மருத்துவமனைக்கு எடுத்து போனாங்க. அங்க டாக்டர் முதலுதவி எல்லாம் செய்து படுக்க வெச்சுட்டாரு. நாங்க போய் டாக்டர் கிட்டே எப்படி இருக்கார்னு கேட்டோம். அதுக்கு டாக்டர் சொன்னார். இப்போ நார்மலா இருக்குது. டிரிட்மென்ட் ஆரம்பிக்கனும்னா பிரசர் கொஞ்சம் குறையுனும் அப்படீனார்.
இரண்டு நாள் கழிச்சு மறுபடியும் டாக்டர் கிட்ட, எப்ப டாக்டர் டிரிட்மென்ட் ஆரம்பிக்கறீங்க...
அதுக்கு அவர் சொன்னார். பிரசர் நார்மலாயிடுச்சு. சுகர் கொஞ்சம் குறையனும். அப்புறந்தான் டிரிட்மென்ட் அப்படீனார்.
இரண்டு நாள் கழிச்சு மறுபடியும் டாக்டர் கிட்ட எப்ப டாக்டர் டிரிட்மென்ட் ஆரம்பிக்கறீங்கன்னு கேட்டோம்.
அதுக்கு அவர் சொன்னார். சுகர் நார்மலாயிடுச்சு . ஆனா லிவர் கொஞ்சம் பிராபளம். அதுக்கு முதலே டிரிட்மென்ட் எடுக்கனும். அப்புறந்தான் நெஞ்சு வலிக்கு பார்க்க முடியும்.
இதை கேட்ட உடனே பக்கத்துலே இருந்த நர்சுக்கு நெஞ்சு வலி வந்துருச்சு.
காலையில் தினந்தோறும் உடற்பயிற்சி தவறாமல் செய்ய பழகிக் கொள்ள வேண்டும். வேதாத்ரி மகரிஷி அவர்கள் தருகிற உடற்பயிற்சி, காயகல்பம், தியானம் எல்லோரும் செய்யும் படி மிகவும் எளிமையாக வடிவமைத்து இருக்கிறார். தினமும் ஒரு அரை மணி நேரம் செய்தால் எந்த நோயும் கிட்ட அண்டாது. பிரசர், சுகர், மூட்டுவலி, உடல்வலி ஆஸ்துமா மற்றும் எந்தவிதமான நாட்பட்ட வியாதியாக இருந்தாலும் தொடர்ந்து செய்து வந்தால் சரியாகி விடும், கட்டுப்படும். ஆனால் தவறாமல் செய்ய வேண்டும்.
எல்லா நோய்க்கும் முக்கிய மூல காரணம் நம்முடைய மனம் என்பதை தெளிவாக புரிந்து கொண்டு அந்த மனதை செப்பனிட பழகி கொள்ள வேண்டும். அதற்க்காக தான் தியானம்.
முதலில் சோம்பேறித்தனமாக தான் இருக்கும். காரணம் நாம் உடம்பை அசைக்காமல் அப்படியே நோகாமல் வாழ்ந்து பழகி விட்டோம். சிலபேரு நேரம் இல்லை அப்படீன்னு சொல்லுவானுக. இப்ப நீங்க எந்த நோய் வந்து மருத்துவமனை சென்றாலும் குறைந்தது ஐந்து நாட்கள் இல்லாமல் உங்களை வெளியே விடமாட்டார்கள். காரணம் எல்லா மருத்துவமனையிலும் நிறைய அறைகள் கட்டி வைத்திருக்கிறார்கள். அதற்கெல்லாம் வாடகை உங்களிடம் தான் வசுலிக்கவேண்டும் அல்லவா. அதற்கான செலவு குறைந்த பட்சம் இருபதாயிரம் ரூபாய் பிடுங்கி இருப்பார்கள். கணக்கு போட்டு பாருங்கள்.. ஐந்து நாட்கள் மருத்துவமனையில் தங்கிய காலம் 120 மணி நேரம்.
மருத்துவமனைக்கு நீங்கள் செலவு செய்த தொகை ரூ. 20000. சாராசரியாக இந்த தொகையை சம்பாதிக்க நீங்கள் 500 மணி நேரம் செலவிட வேண்டும். கணக்கு போட்டு பாருங்கள். உங்கள் வாழ்கையில் 620 மணி நேரத்தை வீணாக்கி விட்டீர்கள். ஆனால் காலையில் ஒரு அரை மணி நேரம் உடற்பயிற்சி
செய்யமாட்டார்கள். கேட்டால் நேரம் இல்லை என்பார்கள்.
இந்த 620 மணி நேரம் உங்களுக்கு திரும்ப கிடைக்காது. சாதாரண காய்ச்சலுக்கே இந்த கதி என்றால், இப்பொழுதெல்லாம் ஹார்ட் அட்டாக், கிட்னி சட்னியாதல், லிவர் புவர் ஆகுதல் போன்ற வியாதிகள் வந்தால் நீங்கள் வாழ்நாளில் சம்பாதித்ததை எல்லாம் செலவு செய்து, கடனும் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவீர்கள். அதன் பின்னர் சங்கும் ஊதிவிடுவீர்கள். கடைசியில் உங்கள் மனைவியும், பிள்ளைகளும், சின்ன வீடுகளும் நடுத் தெருவில் நிற்க வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு தினம் உடற்பயிற்சி செய்யுங்கள். இது உங்கள் உடலை பாதுகாப்பதற்கு. தினமும் தியானம் செய்ய கற்றுக்கொள்ளுங்கள். இது உங்கள் மனதை பக்குவ மாக்குவதற்கு.... அதை விடுத்து நீங்கள் உங்கள் பேவரட் சாமிக்கு மொட்டை போடுவதாலோ, காவடி எடுப்பதாலோ, உண்டியலில் பணம் போடுவதாலோ, மண்டையில் தேங்காய் உடைப்பதாலோ, குண்டியில் மாங்காய் உடைப்பதாலோ எதுவும் நடக்கப்போவதில்லை..... வாழ்க வழமுடன்.
-NKK பாபுராஜ்
